வியாழன், 11 செப்டம்பர், 2014

உ.சகாயம் மாற்றம் அறை மட்டுமா காரணம்?

 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சியில் கோ ஆப்டெக்ஸ்  கிளைக்கு இடம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கிளை மேலாளர் சோமசுந்தரத்தைத் தாக்கிய  ஆளுங்கட்சியினர்  மீது நடவடிக்கை எடுப்பதற்கு அத்துறையின் அமைச்சர் கோகுல இந்திரா தடையாக இருப்பது குறித்து உ.சகாயம் ஐ.ஏ.எஸ்,  தமிழக அரசின் முதன்மை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு எழுதிய கடிதத்தாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லாப திசையில் கோ ஆப் டெக்ஸ்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் மிக நேர்மையான அதிகாரி எனப்பெயர் எடுத்தவர் உ.சகாயம். இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக  இருந்த போது மேலூரில் நடந்த கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தி அரசுக்கு அறிக்கை அளித்தன் விளைவாக பல கோடி கிரானைட் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
மதுரையின் ஆட்சியராக இருந்த உ.சகாயத்தை தமிழக அரசு, கோ ஆப் டெக்ஸ்   நிர்வாக இயக்குநராக கடந்த 2012 ஆம் ஆண்டு திடீரென பணி மாறுதல் செய்தது.  பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தினை லாபத்தின் திசை நோக்கி உ.சகாயம் திருப்பினர் என்றால் மிகையில்லை.
கால, காலமாய் நஷ்டத்தில் இயங்கி வந்த கோ ஆப் டெக்ஸ்  கடந்த 2012 - 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியது. அத்துடன்  200 கோடியில் இருந்த விற்பனை  300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மட்டும் 14 கோடி ரூபாய் லாபம் கோ ஆப் டெக்ஸ் மூலம்  கிடைத்தது. இதிலிருந்து ஒரு கோடியை, நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக உ.சகாயம்  வழங்கினார் என்பது குறிப்பிடத்க்கது.
வெளிச்சத்திற்கு வந்த
இலவச வேட்டி சேலை ஊழல்

கால, காலமாய் நெசவு செய்யும் நெசவாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்கள் நெய்த துணியில்  நெசவாளர்கள் புகைப்படத்தை இணைக்க நடவடிக்கை எடுத்தார். தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டியை அனைத்து தமிழர்களும் அணிய வேண்டும் என்பதற்காக வேட்டி தினத்தை கோ ஆப் டெக்ஸ் மூலம்  அறிவித்து அதன் மூலம் இளைஞர்களையும் வேட்டியின் திசைநோக்கி திருப்பினார்.  அத்துறையில் நடைபெற்ற இலவச வேட்டி சேலை ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததும் உ.சகாயம் ஐ.ஏ.எஸ். தான்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் பிரபல ஜவுளி உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்காக இந்த ஆலையில் கடந்த ஆண்டு நிறைய வேட்டி, சேலைகள் தயாரிக்கப்பட்டது. ஆனால் அவற்றை பொதுமக்களுக்கு முறையாக விநியோகிக்காமல் ஆலையில் பதுக்கி வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலையில் உள்ள முத்திரையை அழித்துவிட்டு புதிய முத்திரை பதித்து, மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அந்த ஜவுளி ஆலை திட்டமிட்டிருந்தாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அந்த ஆலையில் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகள் முறையாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சகாயம் மேற்கொண்ட ஆய்வில் இந்த மோசடி உறுதி செய்யப்பட்டடுள்ளது. மேலும் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 நாட்களில் 2 துறைக்கு மாற்றம்
இப்படி அதிரடியாக பணியாற்றி கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் நற்பெயரை உயர்த்திய உ.சகாயம் அப்பணியில் இருந்து அமைச்சர் எஸ்.கோகுல இந்திராவின் தூண்டுதலால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற புகார்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதில் கொடுமை என்னவென்றால், அவருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய மற்றும் ஹோமியோபதி துறைக்கு இயக்குநராக பொறுப்பதற்கு முன்பே இரண்டு நாளுக்குள் சென்னையில் உள்ள அறிவியல்  நகரத் திட்டத்துறையின் துணைத்தலைவராக மாற்றப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்குள் அவர் இரண்டு துறைக்கு அவர் மாற்றப்பட்டதன் பின்னணியில் இருப்பதை விசாரித்தோம்.
கிளை மேலாளர் மீது தாக்குதல்
கோ ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் தனக்கு அறை ஒதுக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான எஸ்.கோகுல இந்திரா கேட்டதற்கு, இது நாள் வரை இங்கு எந்த அமைச்சருக்கும் இங்கு அறை ஒதுக்கப்படவில்லையென்பதுடன், அறை ஒதுக்கினால் அங்கு கட்சிக்காரர்கள் திரள்வார்கள். இதனால் ஊழியர்களின் பணிகள் பாதிக்கப்படும் என்று உ.சகாயம் மறுத்துள்ளார்.
கோ ஆப் டெக்ஸ் மண்டல விற்பனை மேலாளர்கள் 11 பேருக்கு கார் வாங்கி முதல்வர் ஜெயலலிதா கையால் வழங்க வேண்டும் என்று அமைச்சர் நினைத்தற்கும், தேவையின்றி கார் வாங்கி நிதியை வீணடிக்க வேண்டாம் என்று அரசிடம் உ.சகாயம்  அறிவுறுத்தியுள்ளார்.
உ.சகாயம் இடமாறுதல் செய்யப்பட்டதற்கு இவைகள் மட்டும் காரணமல்ல. இந்த மாற்றத்தின் பின்னணியில் மிக முக்கியமான விஷயமாக உள்ளது கோ ஆப் டெக்ஸ் கிளை மேலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கிளை மேலாளரான சோமசுந்தரம் என்பவரை  அதிமுகவைச் சேர்ந்த நகராட்சித்தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் சிலர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உ.சகாயம் ,  தமிழக காவல்துறை தலைவர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு  கடிதம் எழுதியுள்ளார். இதனால் கடுப்பான  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான எஸ்.கோகுல இந்திரா, கிளைமேலாளர் சோமசுந்தரம் கொடுத்த புகாரை காவல்துறையிடம் இருந்து வாங்க அமைச்சர் வற்புறுத்தியதற்கு  உ.சகாயம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது துறையைச் சேர்ந்த  அதிகாரி ஒருவரை  ஓட ஓட விரட்டி அடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவிடாமல்  அமைச்சர் தடுப்பது குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு கடந்த 12 நாட்களுக்கு முன்  உ.சகாயம்  ஒரு புகார்  கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் விளைவே, உ.சகாயம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்று திட்டவட்டமாகக் கூறப்படுகிறது.
பணிமாறுதலிலும் பழிவாங்குதல்
கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து உ.சகாயம் முதலில் மாறுதல் செய்யப்பட்ட இந்திய மற்றும் ஹோமியோபதி துறையில் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இத்துறையின் கீழ் பல கல்லூரிகள் செயல்படுகின்றன. இத்துறையில் உ.சகாயத்தை விட்டால், அங்கு நடைபெறும் விஷயங்கள் வெளி உலகத்திற்கு வரும் என்பதால் அவர் 2 நாட்களில் 8 பேர் பணிபுரியும் சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள அறிவியல்  நகரத் திட்டத்துறையின் துணைத்தலைவராக மாற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த துறையின் அலுவலகம் சென்னை காந்தி மண்டபம் சாலையில்  செயல்பட்டு வருகிறது. நேர்மையான அதிகாரிகள் இப்படி ஆட்சியாளர்களாலும், அமைச்சர்களாலும் பந்தாடப்படும் போது, அவர்களுக்கு ஆதரவான குரல் அனைத்துத் தரப்பில் இருந்தும் எழுப்பப்படுவதே ஜனநாயகத்திற்கு நல்லது. சமூகத்திற்கும் நல்லது.
- ப.கவிதா குமார்
( தீக்கதிரில் 9.9.2014 வெளியான எனது கட்டுரை )

ஞாயிறு, 8 ஜூன், 2014

அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் கிடைக்குமா? கிடைத்தால் நவீனமயத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு செலவழிக்குமா?


அரசு நிறுவனங்கள் தொலைக்காட்சி சேனல் நடத்த அனுமதிக்கக் கூடாது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ( டிராய் ) உத்தரவை மீறி தமிழக அரசின் கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.சமீபத்தில் மத்திய தகவல் மற் றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதி யிருந்தார். அக்கடிதத்தில்,“ டிஜிட்டல் உரிமம் பெற தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு சட்டப்படி முழுத் தகுதி உள்ளது. டிஜிட்டல் உரிமம் தரப்பட்டால்தான் ஏழை, நடுத்தர மக்கள் தரமான கேபிள் சேவை பெற முடியும். டிஜிட்டல் உரிமம் கோரி கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய அரசிடம் அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்தது. அரசு கேபிளுக்கு பின்பு விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இதுவரை டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை ’’ என்று கடிதத்தில் எழுதியிருந்தார்.
டிராய் அறிவுறுத்தல்
கடந்த 2008ம் ஆண்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதில், “ மத்திய அமைச்சகங்களோ, மாநில அரசுத் துறைகளோ, மத்திய- மாநில அரசுகளுக்குச் சொந்தமான நிறுவனங்களோ, மத்திய-மாநில அரசின் சார்பு நிறுவனங்களோ அல்லது மத்திய- மாநில அரசுகள் தனியாருடன் இணைந்து கூட்டாகவோ அல்லது மத்திய-மாநில அரசு நிதி உதவியில் செயல்பட்டு வரும் எந்த ஒரு நிறுவனமோ சேனல் ஒளிபரப்பிலோ, கேபிள் விநியோகத்திலோ ஈடுபட அனுமதிக்கக்கூடாது’’ என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவித்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்று தமிழக அரசு இடைக்காலத்தடையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 5-7-2012 அன்று மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தது.
கேபிள் கட்டுப்பாட்டு அறையின் நிலை
இந்தப் பின்னணியில் அனலாக் முறையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுமளவிற்கு தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடைபெற்று வருகிறதா என்ற கேள்வியை எழுப்பு வது அவசியமாக இருக்கிறது. உதா ரணத்திற்கு மதுரையைப் பொருத்த வரை கடந்த 2011 ஆம் ஆண்டு எல் லீஸ்நகர் பகுதியில் உள்ள சொசைட்டி கட்டிடத்தில் கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டது. இதில் வட் டாட்சியர், ஒரு வருவாய் ஆய்வாளர், டெக்னீசியன், 2 உதவியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு சென்னை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப் பட்டு வருகிறது. இது போக, மேலும் வசூல் செய்வதற்கு 2 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு தினசரி 250 ரூபாய் வழங்கப்படுகிறது. வாடகை கால்டாக்சி மூலம் ஆபரேட்டர்களிடம் மாதம் தோறும் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதுவரை மூன்று வட்டாட்சியர்களும், மூன்று வருவாய் ஆய்வாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த அரசு கேபிள் டிவி கட்டுப் பாட்டு அறையில் உள்ள ஜெனரேட்டர், டிரான்ஸ்மீட்டர், இடிஎப்ஐ கருவி போன்றவற்றை மின்சாரம் போனால் ஜெனரேட்டர் மூலம் இயக்குவதற்கான டீசல், யூபிஎஸ்க்கான 10 பேட்டரிகள் ஆகியவை அனைத்தும் மதுரையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட் டர்கள் வாங்கித்தருவதாகும். இவற்றை சர்வீஸ் செய்யும் செலவையும் இவர்கள் தான் செய்து வருகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
கேபிள் செலவு
இது அலுவலகத்தில் இருந்து வீடுகளுக்கு வரும் கேபிள் வயர் அனைத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலவில் தான் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை எல்லீஸ்நகரில் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் இருந்து கொட்டாம்பட்டி வரை 45 கி.மீ தூரம் வரை கேபிள் வயர்களும், உசிலம்பட்டி வரையிலான சுமார் 36 கி.மீ வரையிலான கேபிள் வயர்களும், கல்லுப்பட்டி சுமார் 30 கி.மீ வரையிலான கேபிள் வயர்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 1 மீட்டர் கேபிளின் விலை 12 ரூபாய். 1 கி.மீ தூரத்திற்கு கேபிள் இணைப்பைக் கொண்டு செல்வதற்கு 12 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில் பாபின் ஸ்டே உள்ளிட்ட செலவிற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
இதில், எந்தச் செலவையும் தமிழக அரசோ, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனமோ செய்யவில்லை. அனைத்துச் செலவையும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்தான் செய்துள்ளனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இது தான் நிலை. மாவட்டந்தோறும் இருக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து பொருட்களை வாங்காத தமிழக அரசு, தமிழகம் முழுவதும் டிஜிட்டல்மயமாக்க பல ஆயி ரம் கோடி ரூபாயைச் செலவு செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கொட்டும் வருமானம்
மதுரையில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் மாதம் சுமார் 30 இலட்ச ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இது போக மதுரை மாநகரில் இயங்கும் உள்ளூர் கேபிள் டிவிக்கள் ஐந்தின் மூலம் சேவை வரியில்லாமல் தலா 8.25 இலட்ச ரூபாய் கிடைத்து வருகிறது. இது தவிர மாவட்டத்தில் தாலூகாக்கள் வாரியாக இயங்கும் உள்ளூர் கேபிள் டிவிக்கள் மூலம் பணம் கொட்டுகிறது. இவ்வளவு பணம் வந்தாலும், கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைக்கான செலவுகள் கேபிள் ஆபரேட்டர்கள் தலையில்தான் விழுந்து வருகிறது.
போதுமான நிதி தேவை
அரசு கேபிள் டிவி டிஜிட்டல்மய மானால் அரசுக்கு மட்டுமல்ல, இணைப்பு பெறுவர்களுக்கும் செலவுதான். டிவியில் படம் பார்க்க வேண்டுமானால் வீடுகளில் செட்ஆப் பாக்ஸ் இல்லாமல் படம் பார்க்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் 1,500 ரூபாய் கூடுதலாகச் செலவு செய்து செட்ஆப் பாக்ஸ் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். செட்டாப் பாக்ஸ் தயாரிப்பை கொரியா மற்றும் சீனா கம்பெனிகள் தான் தற்போது செய்து வருகின்றன.
இவற்றில் பழுது ஏற்பட்டால், அவற்றை சரிசெய்வதிலும் பிரச்சனை உள்ளது.முதலில் தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகளை நவீனமயமாக்க போதுமான நிதியை தமிழக அரசு செலவு செய்ய வேண்டும் என்பதே கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கோரிக்கையாக உள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) உத்தரவை மீறி தமிழக அரசின் கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படுமா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள்.
- ப. கவிதா குமார்
ஜூன் 7- தீக்கதிர் )

சட்டத்தை மீறும் பள்ளிகள் நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட நிர்வாகம்


கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி பள்ளிகளில் சேர்க்கை நடத்தாதபள்ளிகள் மீது மதுரை மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வில்லையென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட) ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் இந்த மாணவர்கள் சேருவதற்கு தகுதி உடையவர் என்றும், தொடக்கப்பள்ளி என்றால் ஒரு கிலோ மீட்டர், நடுநிலைப்பள்ளி என்றால் 3 கிலோ மீட்டர் என்ற தூர எல்லையையும் இந்த சட்டம் நிர்ணயித்துள்ளது. அனைவருக்கும் தரமான இலவசக்கல்வியை அரசுப்பள்ளிகள் வாயிலாக செய்ய முடியாத மத்திய, மாநில அரசுகள், தனியார் கல்வி முறையில் வழங்கப்படும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் 5,255 தனியார் ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்களும், 1,716 தனியார் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். 8ம் வகுப்பு வரையிலான மொத்த மாணவர்களில் சுமார் 29 சதவீதம் பேர் இந்த தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். வகுப்பறையில் 30 பேர் என்றால் அதில் 8 பேருக்கு கட்டாய இலவசக்கல்வி சட்டப்படி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் எத்தனை பேர் இந்த சட்டத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.இச்சட்டம் கடந்த 2013ம் ஆண்டுதான் மதுரை மாவட்டத்தில் அமலாகியுள்ளது.
கடந்த 2013-2014ம் ஆண்டு 156பள்ளிகளில் 2509 இடங்களை நிரப்ப வேண்டும் என்று இச்சட்டம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், 1153 பேர் தான் இச்சட்டப்படி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள் ளனர். இப்படி நிரப்பப்பட்ட பள்ளிகள் முழுமையாக 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படு த்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முழுமையாக 25 சதவீத இடஒதுக்கீட்டை 11 பள்ளிகள் மேற்கொள்ளவில்லை. சிஇஓஏ மெட்ரிக்குலேசன் பள்ளி, சிஇஓஏ மெட்ரிக் பள்ளி, கிறிஸ்டெக்கிங் மெட்ரிக்குலேசன் பள்ளி, ராகவ் பப்ளிக் பள்ளி, வேலன், விரகனூரில் உள்ள வேலம்மாள் பள்ளி, மகரிஷி மெட்ரிக்குலேசன் பள்ளி, கிரசன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி, அக்ஷரா மெட்ரிக்குலேசன் பள்ளி, அவனியாபுரத்தில் உள்ள எஸ்பிஜே மெட்ரிக்குலேசன் பள்ளி, வண்டியூர் தாகூர் வித்யாலயா பள்ளி ஆகியவை முழுமையாக 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையென்று கூறப்படுகிறது. தகுதிவாய்ந்த மாணவர்கள் சேர்க்கைக்கு வரவில்லையென்று இப்பள்ளிகள் காரணம் சொல்லியுள்ளன. மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 40 சதவீதம் பேர் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் நடைமுறைப்படுத்துகின்றனவா? என தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கல்வி அதிகாரிகளும், மதுரை மாவட்ட நிர்வாகமும் செய்த அசட்டை, இச்சட்டம் முழுமையாக அமலாகாத நிலைக்குச் சென்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2014-2015ம் ஆண்டு 161 பள்ளிகளில் 2590 பேரை கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை அன்றைய தினமே கணக்கிட்டு பள்ளியின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற சட்டத்தை பெரும்பாலான பள்ளிகள் கடைப்பிடிக்கவில்லை.
இதுகுறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை இப்பள்ளிகள் செய்யவில்லை. தகுதியான நபர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வெளியிடுவதுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரங்களையும், அதற்கான காரணத்தையும் அறிவிப்புப் பலகையில் கடந்த ஆண்டு எத்தனை பள்ளிகள் வெளியிட்டன ? ஆனால், முழுமையாக இச்சட்டத்தை நிறைவேற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மதுரை மாவட்ட மெட்ரிக்குலேசன் கல்வி அதிகாரிகள், தமிழக அரசின் அரசாணை 60 ஐ அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியதுடன், மார்ச்-24 ம் தேதி ஒரு சர்க்குலரையும் அனுப்பியுள்ளனர். இந்த ஆண்டு 100 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன், இந்த ஒதுக்கீட்டின்படி காலியாக உள்ள மாணவர் சேர்க்கையில் வேறு மாணவர்களைச்சேர்க்கக்கூடாது என்றும் வலியுறுத்தி யுள்ளதாகக்கூறப்படுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி முழுமையாக தனியார் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் தான் முழுமையாக இச்சட்டம் அமலாகவில்லையென்று பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.
தரமான கல்வி தனியார் பள்ளிகளில்தான் கிடைக்கும் என்ற எண்ணத்தை விதைத்துள்ள மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் அதே வேளையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள்பணத்தைக் கொட்டி உருவாக்கப்பட் டுள்ள கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், முழுமையாக அமலாக்கப்படுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்காமல் அச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாது.- ப.கவிதா குமார்
(  ஜுன் 6 - தீக்கதிர் )

ரூ.9.70 கோடி செலவிலான மதுரை ஆம்னி பேருந்து நிலையம் : விசாரணைக் குழு அறிக்கையால் பதறும் மாநகராட்சி அதிகாரிகள்


தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்தமதுரை ஆம்னி பேருந்து நிலையத்தினைக் கட்ட மாநகராட்சியின் பொதுநிதியான 9.70 கோடி ரூபாய் செலவுசெய்யும் அதிகாரத்தை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது என்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துள்ளது.
முதல்வரின் உத்தரவின் கீழ் மதுரையில் ஆய்வு செய்து நகராட்சி நிர்வாக தனிப்படை அதிகாரிகள் கொடுத்த அறிக்கை தற்போது பலரின் பதவிகளுக்கு கெடு வைத்துள்ளது.மதுரையில் வெளியூர் பேருந்துகள் தற்போது பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுவதால் பொதுமக்களும், பயணிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகிலேயே வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் வகையில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன்படி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை சென்னையில் இருந்தே முதல்வர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தபேருந்து நிலைய விவகாரம் தான்தற்போது கிணறு வெட்ட பூதம்கிளம்பியது போல கிளம்பியுள்ளது.மதுரை மாநகராட்சி நேரடி நியமன ஐஏஎஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரை மாநகராட்சியின் நிர்வாகம் குறிப்பிடத்தக்க முறையில் நடைபெற்று வந்தது. ஏ.கார்த்திக் ஐஏஎஸ், ஹர்சகாய் மீனாஐஏஎஸ் ஆகியோர் மட்டுமே கடைசியாக பணிபுரிந்த நேரடி நியமன ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவார்கள்.
அதன் பின் கிரண்குமார் குர்ராலாஎன்பவர் தான் மதுரை மாநகராட்சியில் நேரடி நியமன ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். நேர்மையாக செயல்பட்ட காரணத்தால் இரண்டே மாதங்களில் மதுரையில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். அவர் எழுதி அனுப்பிய ஒரு அறிக்கைதான் தற்போது மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ரூ.1 கோடிக்குள் மட்டுமே மாநகராட்சியின் பொதுநிதியை பயன்படுத்தி திட்டங்கள் நிறைவேற்ற முடியும்.
அதற்கு மேல் மதிப்பிடப்படும் திட்டங்களுக்கு தமிழக அரசின் அனுமதி அல்லது தமிழக அரசின் நிதிஉதவி பெற வேண்டும். ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தில் அதைப் பின்பற்றாமல் முறைகேடாக பணி நடந்ததாகவும், தமிழக அரசு விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கிரண்குமார் குர்ராலா அனுப்பிய புகார் தற்போது விசாரணை வளையத்தினையும் தாண்டி நடவடிக்கைக்குப் போகிறது. சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரக தனிப்படை அதிகாரிகள் ஐந்து பேர் மதுரையில் இரண்டுநாட்கள் தங்கி ஆய்வு செய்து அறிக்கையைத் தயாரித்து முதல்வரிடம் வழங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு விபரங்கள் வெளியாகியுள்ளன.
நூதன ஏமாற்று
மதுரையில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதலில் ரூ.26கோடி வரை அதற்கான மதிப்பீடுதயாரிக்கப்பட்டது. தமிழக அரசின் அனுமதியை தவிர்ப்பதற்காக ஒரேபணியை பல வகையாக பிரித்து ரூ.99 லட்சத்து 99 ஆயிரத்து 999என்ற ரீதியில் தான் பெரும்பாலான மதிப்பீடுகள் தயாராகின. எத்தனை மதிப்பீடுகள் இந்த பேருந்துநிலையத்திற்கு என தயாரிக்கப்பட்டது என்ற விபரங்களை சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரக தனிப்படை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். சுமார் ரூ.9.70 கோடி செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த பேருந்து நிலையத்தினை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் ஆணையாளராக இருந்த ஒருவர் அனுப்பியிருந்த குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படாத நிலையில், முதல்வர் எப்படி இந்த பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்கு அனுமதியளித்தார் என்ற கேள்வியும் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் உலவுகிறது. இந்த ஊழல் முறைகேடுகளுக்குப் பின்புலமாக பல அதிகாரிகள் இருப்பதையும் நகராட்சி நிர்வாக ஆணையரக அதிகாரிகள் குறிப்பெடுத்துள்ளனர்.
`பொறுப்பு’ அதிகாரிகள்
மதுரை மாநகராட்சியின் அனைத்து விரிவாக்கத் திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் பொறியியல் துறையின் முதன்மைப் பணியாகும். இத்துறையின் கீழ் தான் மதுரையின் பல வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் பலர் `பொறுப்பு’என்ற பதவியுடன் பல ஆண்டுகளாகபணியாற்றி வருகிறார்கள். உதாரணத்திற்கு இளநிலை பொறியாளர்நிலையில் உள்ள முருகேசபாண்டியன் மதுரை வடக்கு மண்டல உதவி ஆணையாளராகவும், உதவியாளர் நிலையில் உள்ள தேவதாஸ் இன்றுவரை தெற்கு மண்டல உதவி ஆணையாளராகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இன்னும் உதவிப் பொறியாளராக இருக்கக்கூடிய எஸ்.அரசு என்பவர் செயற்பொறியாளர் என்ற பொறுப்பில் பணிபுரிகிறார். இளநிலைப் பொறியாளராக பணிபுரியக்கூடிய சேகர் என்பவர் மதுரை வடக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் என்ற நிலையில் இருந்து பணிபுரிந்து வருகிறார். இதே உதவி செயற்பொறியாளர் நிலையில் உள்ள இராஜேந்திரன், சந்திரசேகரன் ஆகியோர் இன்றைய நிலையில் செயற்பொறியாளர் பொறுப்பு என்ற பதவியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அடிப்படையில் மஸ்தூர் கிரேட் 1 லேபராகவும், தொழில்நுட்ப உதவியாளராகவுமே அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை விடக்கொடுமை என்னவென்றால், கடந்த 2001 ஆம் ஆண்டுஜனவரியில் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ககன்தீப் சிங் பேடிஐ.ஏ.எஸ், 12 உதவிப் பொறியாளர்களை நேரடி நியமனம் செய்த பின்புதான் பி.இ என்ற கல்வித்தகுதியை பலர் பூர்த்தி செய்தனர் என்றும்கூறப்படுகிறது. நேரடி நியமனம் பெற்ற இந்த 12 உதவிப் பொறியாளர்களுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்குப் பின்பும் பணிமூப்பு பட்டியலை முறைப்படி தயாரித்து பதவிஉயர்வு வழங்கப்படவில்லை. முறையான பதவி உயர்வு பெற வேண்டியவர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள நிலையில், தகுதியில்லாத பலர் பொறுப்பு அதிகாரிகளாக இருந்து மாநகராட்சியை கோலோச்சி வருகின்றனர் என்ற விபரங்களையும் தனிப்படை குறிப்பெடுத்துள்ளது.
ஒருவர் ஒரு பதவியில் பொறுப்பு அலுவலராக 3 மாதங்களுக்கு மிகாமல் இருக்கலாம்; ஆனால், மதுரை மாநகராட்சியில் பல பத்தாண்டு காலம் பலர் பொறுப்பு அலுவலராக நீடிப்பதில் மர்மம் நீடிக்கிறது. குறிப்பாக, மதுரை மாநகராட்சியின் முக்கிய பொறுப்பான நகரப் பொறியாளர் பொறுப்பு பல ஆண்டுகளாக பொறுப்பு அலுவலராலேயே நிரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபரங்களையும் தனிப்படை அதிகாரிகள் திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை போன்ற வளர்ந்த நகரத்திற்கு தலைமைப் பொறுப்பில் உள்ள பொறியாளர், செயற்பொறியாளர் நிலையில் இல்லாமல் தலைமைப்பொறியாளர் நிலையில் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். திட்ட மதிப்பீடுகளைசம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர்கள் சுயமாக திட்டமிடாமல், ஒப்பந்தக்காரர்களின் பொறியாளர்கள் திட்டமதிப்பீட்டில் கையெழுத்திடும் முறையைத் தவிர்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பொறுப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய முறையான, நேர்மையான தொழில்நுட்ப குழுவை பொதுப்பணித்துறை மூலம் நியமித்து முறைகேடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதவிப்பொறியாளர்கள் நேரடிநியமனத்தில் நடைபெற்ற விதி மீறல்கள், குளறுபடிகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை இக்குழு பரிந்துரைத்துள்ளதாக மாநகராட்சி வட்டாரத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் சிலர் கூறினர். இப்பிரச்சனை குறித்து எழுதிய பல பத்திரிகையாளர்களின் குரல்கள், கரன்சிக் கட்டுகளால் சத்தமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது.மதுரை மாநகராட்சியின் முன்னாள் ஆணையாளர் கிரண்குமார் குர்ராலா எழுப்பிய நேர்மையான புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனிப்படை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் ?
- ப.கவிதா குமார்
( ஜூன் 3- தீக்கதிர் )

தென் மாவட்ட மக்களின் உயர்கல்விக் கனவு நனவாகுமா? மதுரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிலம் கிடைக்குமா?

தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான அண்ணா பல்கலைக்கழக கிளை மதுரையில் துவக்கப்படும் என கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலையை ஆளுங் கட்சியினரும், அதிகாரிகளும் மேற்கொண்டு வருவதால், 4 ஆண்டுகளாக கட்டிடம் கட்ட இடம் தேடி `அலைகின்றனர்.’தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறுவதற்காக அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. சட்டமன்றத்திலும் இது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தது.
83.71 ஏக்கர் நிலம்
கடந்த திமுக ஆட்சியின் போதுமதுரையில் அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் அமைப் பதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தென் தமிழகத்தின் உயர்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் மதுரை,சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த 36 கல்வி நிறுவனங்களின் 15 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகம் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை காமராசர் பல்கலை. கல்லூரியின் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இப்பல்கலைக்கு நிரந்தர கட் டிடங்கள் கட்ட சர்வேயர் காலனி அருகில் உள்ள கொடிக்குளம் கண் மாயில் 83.71 ஏக்கர் இடத்தை நில உரிமை மாற்றம் செய்வதற்கான முன்நுழைவு அனுமதி வழங்கி அரசாணை ( எண்:398) வெளியிடப் பட்டது. கொடிக்குளம் கண் மாய் புறம்போக்கில் உள்ள83.71 ஏக்கர் நிலம் மேலூர் பொதுப்பணித்துறை பெரியார்பிரதான வாய்க்கால் செயற் பொறியாளர், இந்த கண்மாயினை அரசின் அனுமதியைப் பெற்று, நில உரிமை மாற்றம் செய்யலாம் என்று கருத்து தெரிவித்ததையடுத்து, இந்த நிலத்தினை மதுரை அண்ணாதொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்யப்பட்டது. கண்மாயின் வடக்குப் பகுதியில் இரண்டு உயர்மின் அழுத்த கம்பிகளும், கண் மாயில் முட்புதர்கள் முளைத்து காணப்படுவதாலும், இதே நிலப்பகுதியில் உள்ள 1,214 சதுர மீட்டர் மயானம் பயன்பாட்டில் இல்லாத காரணத்தாலும் இந்த இடம் நில உரிமை மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாகவும் அரசாணையில் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு, பொறுப்பேற்ற பின் பல்கலை. பிரிப்புகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒருங்கிணைக் கப்பட்டன. மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை நிர்வாக அலுவலகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அலுவலகமாக மாற்றப்பட்டது. மதுரை மண்டல அலுவலகத்திற்கான கல்வி சார்ந்த கட்டிடங்கள் கட்ட தலா 30 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித் தார்.
நீதிமன்றத் தடை
இந்த நிலையில் கொடிக்குளம் கண்மாயில் அண்மையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கட்டஅனுமதி வழங்கப்பட்டது. அதன் படி அண்ணா பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொதுப்பணித்துறை தொழில்நுட்ப பிரிவு சார்பில் கட்டுமானப் பணிகளுக்கு 28.59 கோடி ரூபாய் செலவாகும் என்ற தோராய மதிப்பீட்டையும் சமர்பித்தது. இந்தப் பரிந்துரைக்கு துணைவேந்தரும் ஒப்புதல் கொடுக்க, நிதிக்குழுவிற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.
இச்சூழலில் கொடிக்குளம் கண்மாயில் அண்ணா பல்கலைக் கழக கட்டிடம் கட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஒரு வர் நீதிமன்றம் போன போது, அரசின் சார்பில் ஆஜரான கூடுதல்அட்வகேட் ஜெனரல் செல்லப் பாண்டியன், கொடிக்குளம் கண் மாயில் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படமாட்டாது என்று உறுதியளித்தார். இதன் பேரில் கொடிக்குளம் கண்மாயில் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்தது.
இடம் தேடும் மாவட்ட நிர்வாகம்
இந்த நிலையில் மாற்று இடத்தைமதுரை மாவட்ட நிர்வாகம் தேடஆரம்பித்தது. அரசு தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட்ட இடையப் பட்டியில் தீர்வை ஏற்படாத அரசு தரிசு நிலம் சுமார் 50 ஏக்கர் உள்ளதை பார்வையிட்டது. இந்த இடத்திற்கு அருகிலேயே 80 ஏக்கரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களின் பாதுகாப்பை பலப்படுத்த, 45 வீரர்களை கொண்டபட்டாலியன் இங்கு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த இடத்தை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக கூறப்படு கிறது. அடுத்ததாக, சக்கிமங்கலத்தில் சுமார் 70 ஏக்கர் நிலத்தை மாவட்டநிர்வாகம் அண்ணா பல்கலைக் கழகம் அமைப்பதற்கு பார்வை யிட்டது.
நத்தம் புறம்போக்கு மற்றும் தீர்வை ஏற்படாத அரசு நிலமாக இது உள்ளது. இந்த இடத்தில் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்று மாவட்ட நிர்வாகமும், பல்கலைக்கழக அதிகாரிகளும் விரும்பியுள்ளனர். ஆனால், இங்கு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமையமதுரை மாநகராட்சி “உயர்“ பொறுப்பில் உள்ள ஒருவர் விரும்பவில்லை என்று கூறப்படு கிறது. இந்த நிலம் மதுரை மாநக ராட்சிக்கு சொந்தமானது என சிலர் கூறினாலும், அரசு நிலமாக உள்ளது என்று வருவாய்த்துறையினர் கூறுகின்றனர்.
இதன் காரண மாகவே இந்த இடம் புறக்கணிப் பிற்குள்ளாகியுள்ளது.இதனால், நொந்து போன மதுரை மாவட்ட நிர்வாகம், அடுத்ததாக, கீழக்குயில்குடிக்குச் சென்றது.சுமார் 12 ஏக்கர் நிலத்தில் அண்ணாதொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்கலாம் என்றும் யோசித்துள்ளது. ஆனால், ஏற்கனவே, இந்தப்பகுதியில் பலருக்கு அரசுசார்பில் பட்டா வழங்கப்பட்டுள் ளது என்றும் கூறப்படுகிறது. இப்படியாக இடம் தேடும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைய ஒதுக்கப் பட்ட நிதி, கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பதாக அதிகாரிகள் புலம்புகிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர் மானம் அரசாணையாக மாறியும் நிறைவேற்றப்படாமல் இருப்பது, இன்றைய ஆட்சியாளர்களின் கண்டு கொள்ளாத தன்மையின் வெளிப்பாடாகவே உள்ளது. தென் மாவட்ட மாணவர் உலகம் என்ன செய்யப்போகிறது?
- ப.கவிதா குமார்

திங்கள், 14 அக்டோபர், 2013

மதவாதி மோடியின் வாதியாகும் தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் 4 ஆம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் மதுரையில் காந்தி பிறந்த நாளான அக்டோபர்-2 ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தை விளக்கி திராவிட கட்சிகளுக்கு இணையாக காந்திய மக்கள் இயக்கம் பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தது. திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே திராவிடக் கருத்தாக்கத்திற்கு எதிராக எழுதி வரும் புத்திசாலி தமிழருவி மணியனோடு, தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற வைகோவும் முழங்குவார் என்ற முழக்கங்களோடு இருந்த போர்டுகள் ஒரு தினுசாகவே இருந்தது. மகாத்மா காந்தியை பெயரில் மட்டுமின்றி தனது இயக்கக் கொடியிலும், வலைதளத்திலும் பயன்படுத்தி வரும் தமிழருவி மணியன், நரேந்திர மோடி நாமாவளியைத் தொடர்ந்து பாடுவதால் என்னவோ பாஜக கலரில் சுவரொட்டிகளில் எக்குத்தப்பாக காட்சி தந்தது. காந்தி பிறந்த நாள் அன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழருவி மணியன் தங்கு தடையின்றி பேசிய பேச்சு மாற்று அரசியலைப் பற்றித்தான். அந்த மாற்று என்னவென்றால் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் என்ற நச்சுப் பாம்புவின் குட்டியான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான். நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கட்டும் என்றார் மகாத்மா காந்தி. தமிழருவி மணியன் 1966 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் துவங்கி காற்றில் அலையும் காகிதம் போல, 40 ஆண்டு காலமாக காங்கிரஸ், பின் ஜனதா, அதன் பின் ஜனதாதளம், அதன் பின் தமாகா, மீண்டும் காங்கிரஸ் என தன் விரும்பிய மாற்றத்தை அவரிடம் இருந்தே துவக்கினார். இதன் பின் காந்திய அறிவியல் இயக்கமாகத் துவங்கி தற்போது 4 ஆம் ஆண்டு கொண்டாடும் காந்திய மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார். மாவீரன் நெப்போலியனின் “நான் மற்றவர்களைப் போல மனிதன் இல்லை" என்ற முழக்கத்தை தனது வலைதளத்தில் எழுதி வைத்ததில் இருந்து தமிழருவியை புரிந்து கொள்ள முடியும் அவர் ஒரு வித்தியாசமானவர் என்பதை. ஊருக்கு நல்லது சொல்வேன் என்று இலக்கிய மேடைகளில் முழங்கிய தமிழருவி மணியன் அக்டோபர்-2 ம் தேதி மதுரையில் என்ன பேசினார்? அவரது இயக்கத்தின் கொள்கையான இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக, பரந்த இந்தியாவைப் பற்றி கனவு காணும் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பேசினார். காந்திய மக்கள் இயக்கம் எந்த அரசியல் கட்சியின் நலனுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இயங்காது என்று கூறிவிட்டு மோடிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஏன் தமிழருவி இறங்கினார்? மனித குலத்திற்கு அமைதியையும், நல்வழியையும் கொண்டு சேர்ப்பதே அனைத்து மதங்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது என்ற சமய நல்லிணக்கத்தை தனது இயக்கத்தின் கொள்கையாய் வரிந்து வைத்துள்ள வரிப்புலி, மதச்சார்ப்பற்ற கொள்கைக்கு வேட்டு வைக்கும் பாஜகவுக்கு எப்படி ஜால்ரா தட்டிப் பேசினார்? இந்து மதத்தின் கேடுகெட்ட சாதியபடிநிலை, மனிதர்களை சாதிகளின் கூறுகளாகப் பிரித்துப்போட்டுள்ளது. வர்க்கத்தை வர்ணமாக பார்க்கும் இந்துத்துவா கொள்கைகளைத் தனது கொள்கையாகக் கொண்ட பாஜகவின் மோடி ஆதரிக்கும் தமிழருவி, அவரது இயக்கத்தின் கொள்கையான இரட்டைக்குவளை போன்ற தீண்டாமை அடையாளங்களை மோடிக்காக அடகு வைத்து விடுவாரா? பாஜகவின் ஞானகுருவான சங்கரச்சாரியின் சொல்லில் சொல்வதென்றால், “வீட்டை விட்டு வெளியே போகும் பொம்பளைங்க கெட்டவங்க“ என்ற இந்துத்துவாவின் கருத்தாடலை ஆண்- பெண் சமத்துவம் பேசும் தமிழருவி, இனி மேடை மேடையாய் எப்படி பேசுவார்? தமிழ் நீச பாஷை, சமஸ்கிருதமோ சிறந்த பாஷை எனக்கூறி பாஜக மத்திய ஆட்சியில் இருந்த போது அதனை செம்மொழியாக அறிவித்த கொள்கைவாதிகளை தற்போது தாங்கிப் பிடித்திருக்கும் தமிழருவி, தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை பேச முடியுமா? தமிழகத்தில் மாற்று அரசியல் அணி அமைவதற்கு பாஜக, தேமுதிக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் முதலில் நெருங்கி வரவேண்டும் என்று ஜோசியக்காரன் குருவும், கேதுவும் கொஞ்சம் நெருங்கனும் என்பது போல பேச துவங்கியுள்ள தமிழருவி, 15 விழுக்காடு வாக்காளர்கள் தமிழகத்தில் மோடியை பிரதமராக்க விரும்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியும், ஏ.சி. நீல்சன் குழுவையும் கொண்டு ஏதாவது கருத்துக்கணிப்பை தமிழருவி மணியன் நடத்தினாரா என்று தெரியவில்லை!
மோடி இந்தியாவின் பிரதமர், வைகோ தமிழகத்தின் முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என சண்டமாருதம் செய்யும் தமிழருவி மணியன், மதிமுகவும், தேமுதிகவும் ஒரே அணியில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த், முதலமைச்சராக ஆகமாட்டேன் என்று பாலில் அடித்து தமிழருவி மணியனிடம் சத்தியம் செய்து கொடுத்தாரா என்று தெரியவில்லை. இரண்டு பேரிடமும் பேசிவிட்டேன் என்று பேசும் தமிழருவி, என்ன பேசினார் என்று தெரிவிக்கத் தயாராக இருக்கிறாரா? மாற்று அணியை உருவாக்க கம்யூனிஸ்டுகளை அணுகினேன். ஆனால், அவர்கள் அதற்கு ஆதரவு தரவில்லை என்று பேசிய தமிழருவி, ஆறு சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகள் மாற்று அரசியலை உருவாக்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். நரம்பில்லாத நாக்கு எதையும் பேசும் என்பதற்கு இதைவிட வேறு சான்று சொல்ல முடியுமா? தேசிய அளவில் ஒரு மாற்றை உருவாக்க தமிழருவி மணியன் என்ன ராஜதந்திரியா? காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது தான் தன்னுடைய ஒரே வேலை என்று மதுரை மேடையில் முழங்கிய தமிழருவி மணியன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் விடுதியில் தான் வசதியாகத் தங்கியிருந்தார் என்பதை பகிரங்கமாக சொல்லத் தயாரா? இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், இந்திய அரசியலும் பல தியாகங்களைச் செய்த கம்யூனிஸ்டுகள் மத்தியில் ஆட்சியை உருவாக்கிய வரலாற்றை மறந்து விட்டு, வானுலகத்தில் இருந்து குதித்து வந்த தேவமகனைப் போல, தமிழருவி மணியன் சொன்னவுடன், இந்தியாவில் மோடியை பிரதமராக்கி விட்டு தான் மக்கள் அடுத்த வேலை பார்க்கப்போவார்கள் என்பது போல பேசுகிறார். யாருக்கும் புரோக்கர் வேலை செய்யவில்லை என்று கூறும் தமிழருவி, தமிழகம் வந்த பாஜக தேசியத்தலைவர் ராஜநாத்சிங்கை பார்த்து பேசிவிட்டு தனது மோடிபுராண ஊர்வலத்தை ஆரம்பித்ததற்கு என்ன பெயர்? காமராசரின் காலடியில் பாடம் படித்தவன் என்று கூறிய தமிழருவி, காமராசரை கொல்ல முயன்ற இந்துத்துவாக் கூட்டத்தை ஆதரித்து என்ன பேசினார் தெரியுமா? “இந்திரா காந்தியிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற இந்துமதவாதிகளுடன் காமராசர் கூட்டணி அமைத்தார். அவர் என்ன மதவாதியா?" எனக்கேள்வி எழுப்பிய தமிழருவி, மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை ஒப்புத்து விட்டு காந்தியை உயர்சாதியினரும் ஏற்கவில்லை. தலித்துகளும் ஏற்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். அவர் பெயரில் இயக்கத்தை வைத்துக்கொண்டு கோட்சேக்கு ஆதரவாக எப்படி பேச முடிந்தது தமிழருவி மணியனால்? கடைசியாக பேசிய அவரின் பேச்சுகள் தான் ஆபத்தின் உச்சமாக இருந்தது. "பாஜக, மாற்று அரசியலை முன்வைத்து பிரச்சாரம் செய்வதுடன், காங்கிரஸ் ஊழல்களை வெளிப்படுத்த வேண்டும். சிறுபான்மை உணர்வை எப்படி காயப்படுத்தக்கூடாதோ, அதே போல இந்துத்துவா உணர்வையும் காயப்படுத்தக்கூடாது. என்னை வகுப்புவாதி என்றோ, மதவாதி என்றோ சொன்னால் எனக்கு கவலையில்லை. ஆயிரம் பழிகளை சுமக்க தயாராக இருக்கிறேன்“ என்று வியாக்கியானம் பேசினார். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும், இஸ்லாமிய மக்களையும் கொன்றுகுவித்த நரமோடியின் நவீனதூதர் ஆயிரம் பழிகளை என்ன, இலட்சம் பழிகளையும் சுமக்கத் தயாராகத் தான் இருப்பார். இத்தோடு விட்டாரா என்றால் இல்லை.“மோடி மீது இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது. படித்த நடுத்தர வர்க்கத்திற்கு கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின் நடந்த கலவரம் தெரியாது" என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார். படித்த இளைஞர்களை இவரை விட யாரும் இவ்வளவு கேவலப்படுத்த முடியாது. உலகமே கிராமமாய் சுருங்கியுள்ள நிலையில், அடுத்த நாட்டில் நடைபெறுவதை அடுத்த நொடியில் கையில் உள்ள ஐபோனில் பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்களை எதுவும் தெரியாதவர்களாக நினைக்கும் தமிழருவி மணியன், மறதியை வைத்து அரசியல் நடத்தலாம் என நினைக்கிறார். தமிழருவி மணியனுக்கு என்ன அரசியல் நேர்மை இருக்கிறது? பாஜகவின் மோடிக்காக பிரச்சாரத்தை துவக்கியுள்ள தமிழருவி கொள்கையற்றவர் என்பற்கு, அவரின் எழுத்தே சான்றாக இருக்கிறது. “முதல்வர் ஜெயலலிதாவின் நட்புக்கு முதலிடமளித்து மோடி ஒரு மூன்று தொகுதிகளுக்காக பாஜகவை போயஸ் தோட்டத்தில் அடகுவைக்கப் போகலாம். விஜய்காந்த் ஏதோவொரு கணக்குப் போட்டு திமுக - காங்கிரஸ் வலையில் விழலாம். ஒன்றும் சரிப்பட்டு வராத நிலையில் வைகோ தனிவழி நடக்கலாம். அவர்கள் முடிவில் தலையிட நான் யார்? பாழ்பட்ட அரசியலில் எதுவும் நடக்கலாம்". அரசியல் திசைவழியறியாமல் நடுத்தெருவில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்கும் தமிழருவி மணியன் தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் இடத்தைப் பிடிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது! - ப.கவிதா குமார் ( kavithamukil@rediffmail.com) கீற்று இணையதளத்தில் செவ்வாய், 08 அக்டோபர் 2013 வெளியான கட்டுரை