வியாழன், 13 நவம்பர், 2008

வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமாய்

மழை, வெள்ளத்தால்

வீடிழந்து

சத்துணவுக்கூடத்தில் அகதியாய் வசித்த

அனுபவம் வாய்த்ததுண்டா உங்களுக்கு?


சோற்றுப்பொட்டலம் வாங்க

வரிசையில் நின்றுகிடைக்காமல் ஏமாந்ததுண்டா?வெள்ளத்தால்அடித்துச்செல்லப்பட்ட

அனைத்துப்பொருட்களையும்

இழந்து கையறு நிலையில்

இருந்த போதுஅரிசியும், மண்ணெண்ணெய்யும்

தருகிறோம்ரேசன் அட்டை எங்கே

என்ற கேள்விக்குடைச்சலால்

பொங்கி வந்த

கோபத்தை மௌனமாய் தின்றதுண்டா?

சொந்த தேசத்து அகதிகளாய்

வீடுகளிழந்துவீதிகளில் வசிப்பவர்களின்

காலை உணவு குறித்து

நீங்கள் கனவிலாவது நினைத்ததுண்டா?

பரந்தவெளியை கூரையாய் வேய்ந்த

எங்களின் வசிப்பிடங்கள்

கழிப்பறைகளை விட மோசமானது

என்பதையறிவீர்களா?

மார்ட்டின்மேட்டும்

குட்நைட் காயிலும் இல்லாமல் உறங்க முடியாத உங்களுக்கு ... ...

எப்படி புலரும் எங்கள் விடியல்

என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை.


எப்போதும் போல மழையில் நனைகிறோம்

எப்போதும் போல வெயிலில் காய்கிறோம்

ஐந்தாண்டு திட்டங்கள் பல பார்த்தும்... .

இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு

பெயர்சூட்டப்படும்கல் பிள்ளையாருக்குக்கூட

வாய்த்த வாழ்க்கை

எங்களுக்கு வாய்க்கவில்லை.


- ப.கவிதா குமார்

1 கருத்து:

சகா சொன்னது…

கவிதா, உங்களைப் பிரமிப்பாய் பார்க்கிறேன். நீங்கள் மிக நன்றாய் உங்களை வளப்படுதிக்கொண்டிரிக்கிரீர்கள் சந்தோசமாய் இருக்கிறது